செய்திகள்

ஆயுதப்படைக்கு இடமாற்றம்: மயிலாடுதுறை பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி?

Published On 2018-05-20 16:50 GMT   |   Update On 2018-05-20 16:50 GMT
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் சுகுணா (வயது 45).

இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாகை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து நாகை ஆயுதப்படை பணிக்கு இன்ஸ்பெக்டர் சுகுணா சென்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்ஸ் பெக்டர் சுகுணா இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் அவரை மீட்டு நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சுகுணா ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், மேலும் பணிசுமை காரணமாக அதிகளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் பரவியது. இது போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நாகை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் சுகுணா வீடு திரும்பினார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘ பணிசுமை காரணமாக தூக்க மாத்திரை தின்றதாக கூறப்படுவது தவறு. எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் உள்ளது. இதனால் எனக்கு சிறிது சோர்வு ஏற்பட்டதில் மயங்கி விழுந்தேன். வேறொன்றும் சொல்வதிற்கு இல்லை’’ என்றார்.

Tags:    

Similar News