செய்திகள்

பால்கனி இடிந்து பெண் பலி- வீட்டு உரிமையாளர் கைது

Published On 2018-05-18 07:45 GMT   |   Update On 2018-05-18 07:45 GMT
சென்னை முகப்பேர் மேற்கில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:

சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மனைவி லட்சுமி (வயது 45). கணவன்-மனைவி இருவரும் வீட்டு முன்பு பூ வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று மாலை அவர்கள் வீட்டு முன்பு அமர்ந்து பூ வியாபாரம் செய்தனர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. இதில் கீழே அமர்ந்திருந்த நடராஜன், அவரது மனைவி லட்சுமி, 9 மாத குழந்தையான பேத்தி லக்சனா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதேபோல் பால்கனி இடிந்து விழுந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த முகப்பேர் 3-வது பிளாக்கை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த 4 பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். குழந்தை லக்சனா, நடராஜன், மகேஷ் ஆகிய 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடிந்து விழுந்த வீட்டின் மாடியில் உரிமையாளர் உதயகுமார் வசித்து வருகிறார். பால்கனியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அவர் சரிசெய்ய வில்லை என்பது தெரிகிறது.

இது குறித்து நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக உதயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News