செய்திகள்

முத்தியால்பேட்டையில் தொழிலாளி அடித்து கொலை

Published On 2018-05-17 10:41 GMT   |   Update On 2018-05-17 10:41 GMT
முத்தியால் பேட்டையில் தொழில்போட்டியில் தொழிலாளியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை சாராயக்கடை அருகே நேற்று இரவு ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் முத்தியால் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை நடத்தியதில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தவர் மரக்காணம் அருகே வெண்ணாங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 40) என்பதும், இவர் புதுவையில் தங்கி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்த குமார் (35) என்பவரிடம் சேர்ந்து வீடுகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் குமாரிடம் வேலை செய்து வந்த பழனி கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரின் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டில் தனியாக சென்று செப்டிக் டேங்கை சுத்தம் செய்து அதற்குண்டான பணத்தை பழனி பெற்றார். இது, குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு பழனி முத்தியால் பேட்டையில் உள்ள சாராய கடைக்கு சாராயம் குடிக்க வந்தார். பின்னர் சாராயம் குடித்து விட்டு அருகில் உள்ள அரசு பள்ளி அருகே பழனி நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த குமார் பழனியை பார்த்ததும் கடும் ஆத்திரம் அடைந்தார். அவர் பழனியை சரமாரியாக தாக்கினார். அப்போது பழனி மயங்கி கீழே சாய்ந்தார். ஆனாலும், ஆத்திரம் தீராமல் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து பழனி தலையில் போட்டார். இதில், பழனி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இன்று காலை வீட்டில் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News