செய்திகள்

மடிப்பாக்கத்தில் பீர் பாட்டிலால் அடித்து லாரி டிரைவர் கொலை

Published On 2018-05-17 10:00 GMT   |   Update On 2018-05-17 10:00 GMT
மடிப்பாக்கத்தில் பீர் பாட்டிலால் அடித்து லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

திரிசூலம் இலுப்பை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (24). மினி லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் மது குடித்தார்.

அவருக்கு அருகே 5 பேர் கும்பலும் மது குடித்துக் கொண்டிருந்தனர். குடிபோதையில் இவர்களுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அது முற்றி தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்து சினிமா பாணியில் பீர் பாட்டில்களால் தலையில் ஓங்கி அடித்து தாக்கினர்.

மண்டை உடைந்ததால் நிலை குலைந்த சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் ராஜா, சுடலை ராஜன், ராமச்சந்திரன், திலீப், கலைமணி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

முன் விரோதத்தில் இக்கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News