செய்திகள்

சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் புதிய மேம்பாலம்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2018-05-13 10:49 GMT   |   Update On 2018-05-13 10:49 GMT
சேலம் ஏவிஆர் ரவுண்டானாவில் ரூ.82 கோடியில் புதிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். #edappadipalanisamy

சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்தார்.

நேற்று காலை ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகைளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வந்தது. அதனை தடுக்க ரூ.82.27 கோடி செலவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நிறைவடைந்ததையடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா முதல்-குரங்குசாவடி வரையிலான அந்த புதிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதால் வெகு நாளாக அந்த பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் தற்போது குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்ந்து சேலம் முள்ளுவாடி கேட், மணல் மார்க்கெட் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியிலும் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.  #tamilnews #edappadipalanisamy

Tags:    

Similar News