செய்திகள்

53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Published On 2018-05-10 13:10 IST   |   Update On 2018-05-10 13:10:00 IST
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். #ministervijayabasker
சென்னை:

பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு உணவு பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

விடுமுறை மாதமான இந்த மாதத்தில் பெருமளவு மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் உணவு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் உள்ள 5 சுற்றுலா இடங்களையும் சேர்த்து தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் இன்று முதல் செயல்படும்.

சுற்றுலா தலங்களில் உள்ள அனைத்து உணவு வணிகர்களையும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெறச் செய்து, பொது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்குவதை உணவு பாதுகாப்பு மையம் உறுதி செய்யும்.



சென்னையில், மெரினா கடற்கரை, எலியாட்ஸ் கடற்கரை, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் தியாகராயர் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் செயல்படும்.

சுற்றுலா தலங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையம் அமைக்கப்படும்.

தெருவோர உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம், பழச்சாறு, குளிர்பானக் கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களின் விபரச் சீட்டில் கவனிக்க வேண்டிய விவரங்கள் கொண்ட பலகைகள் காட்சிக்கு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #ministervijayabasker

Tags:    

Similar News