செய்திகள்

தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் - வானிலை இயக்குனர் தகவல்

Published On 2018-05-10 03:10 GMT   |   Update On 2018-05-10 03:10 GMT
கேரளா அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் கோடை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது.

வானிலை மாற்றம் குறித்து சென்னையில் உள்ள வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

கேரளாவையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. மேலும் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் மழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

கடந்த மார்ச் மாதம் முதல் இன்று (நேற்று) வரை தமிழகத்தில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 77 மி.மீ. மழைதான் இயல்பாக பெய்யவேண்டும். அதாவது 8 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கோவிலங்குளம் 12 செ.மீ., மணியாச்சி 11 செ.மீ., சிட்டம்பட்டி 10 செ.மீ., மேலூர் 9 செ.மீ., மேட்டுப்பட்டி 7 செ.மீ., வால்பாறை, திருப்புவனம், துவாக்குடி, தாளவாடி, திருமங்கலம் தலா 5 செ.மீ., பாலக்கோடு, கேத்தி தலா 4 செ.மீ., பெருந்துறை, காங்கேயம், சாத்தூர், திருப்பத்தூர், பெரியநாயக்கன்பாளையம் தலா 3 செ.மீ. மற்றும் 3 செ.மீ.க்கு குறைவாக 45 இடங்களில் மழை பெய்துள்ளது. 
Tags:    

Similar News