செய்திகள்

காஞ்சிபுரத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து - 2 பேர் உடல் கருகினர்

Published On 2018-04-26 08:14 GMT   |   Update On 2018-04-26 08:14 GMT
காஞ்சிபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய 2 பேர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சீபுரம் செங்குந்தர் தோப்பு தெருவில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. நேற்று மாலை பட்டாசு கடை அருகில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை பார்த்த கடை ஊழியர்கள் குடோனின் கதவை திறக்க முயற்சி செய்தனர்.

இதற்குள் பட்டாசுகள் வெடித்தன. மேலும் கடையும் தீப்பற்றியது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பதட்டத்துடன் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இது பற்றி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே பட்டாசு கடை வழியே சைக்கிளில் சென்ற காஞ்சீபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20) என்பவர் மீது வெடித்து சிதறிய பட்டாசுகள் விழுந்தது. இதில் அவரது இரு கால்களிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதே போல் கடை ஊழியர் விக்னேசும் தீயில் சிக்கி உடல் கருகினார். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயிணை அணைத்தனர்.

இந்த விபத்தில் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும், 7 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதம் அடைந்தன.

விபத்தில் காயமடைந்த சதீஷ் மற்றும் கடை ஊழியர் விக்னேஷ் ஆகியோர் காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News