செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே வியாபாரி படுகொலை

Published On 2018-04-24 11:39 GMT   |   Update On 2018-04-24 11:39 GMT
கூடுவாஞ்சேரி அருகே வீட்டு மாடியில் வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி. திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). ஆந்திராவில் கவரிங் நகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

இவர்கள் ஆந்திராவில் தங்கி வியாபாரம் செய்து வந்தனர். மாதத்துக்கு ஒருமுறை நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள பெற்றோரை பார்க்க ஜெகன் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

கடந்த 21-ந் தேதி ஜெகன், குடும்பத்துடன் பெற்றோரை பார்க்க இங்கு வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் மாடியில் ஜெகன் மட்டும் இருந்தார். வீட்டில் உள்ள அறையில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஜெகனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் குட்டா கார்த்திக் உள்பட 10 பேர் வீட்டுக்கு வந்தனர். ஜெகன் மாடியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர்.

திடீரென ஜெகனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. ஆத்திரம் அடைந்த நண்பர்கள் ஜெகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் பரிதாபமாக இறந்தார்.

அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த குடும்பத்தினர் மாடிக்கு வந்து பார்த்தனர். அப்போது ஜெகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகன் நண்பர்களுடன் மது அருந்த சென்று உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது.

இந்த மோதலில் ஜெகனை நண்பர்களே தீர்த்து கட்டி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக குட்டா கார்திக் உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். குட்டா கார்த்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News