செய்திகள்

புதுக்கோட்டை அருகே வாலிபர் தீவைத்து எரித்துக்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-04-19 12:08 GMT   |   Update On 2018-04-19 12:08 GMT
கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி காட்டாற்று பாலத்தின் கீழ் இன்று தீயில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி காட்டாற்று பாலத்தின் கீழ் இன்று தீயில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், ஆலங்குடி டி.எஸ்.பி. அப்துல் முத்தலிப், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாதி எரிந்தநிலையில் பிணமாக கிடந்தார். அவரது பெயர், ஊர் விவரம் எதுவும் தெரியவில்லை.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. நாயானது சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இறந்து கிடந்த வாலிபர் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் பிணம் அருகே சாக்கு பை ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் அந்த வாலிபரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு, சாக்குமூட்டையில் அடைத்து முதலிப்பட்டி காட்டாற்று பாலத்தின் கீழ் போட்டுவிட்டு தீ வைத்து விட்டு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News