செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-04-16 14:58 GMT   |   Update On 2018-04-16 14:58 GMT
ஈரோடு அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.

ஈரோடு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

ஈரோட்டிலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களே இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

ஈரோடு பெருமாள் மலை பகுதி மக்கள் இன்று காலை அந்த பகுதியில் திரண்டனர். பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்த பதாகைகளில் ‘காவிரி நீர் உயிர் நீர்’, ‘காவிரி எங்கள் பிறப்புரிமை’, ‘காவிரி உனக்குன்னா நெய்வேலி எனக்கு’, ‘உழவு இல்லை உணவு இல்லை’, ‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே’, ‘மக்கள் போராட்டமே எதை ஒன்றையும் மாற்றக்கூடியது’ என்பது உள்பட பல வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீக்குளித்து இறந்த சித்தோடு வாலிபர் தர்மலிங்கத்துக்கு பொது மக்கள் அஞ்சலி, வீரவணக்கம் செலுத்தினர். 

Tags:    

Similar News