செய்திகள்

ஈரோடு பஸ் நிலையம் அருகே ஓடும் பஸ்சில் பயணிடம் ஜேப்படி செய்த 2 பேர் கைது

Published On 2018-04-16 12:19 GMT   |   Update On 2018-04-16 12:19 GMT
ஈரோடு பஸ் நிலையம் அருகே ஓடும் பஸ்சில் பயணிடம் ஜேப்படி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு, கருங்கல் பாளையம், காமராஜ் நகரை சேர்ந்தவர் குப்புராஜ். இவர் சம்பவத்தன்று பன்னீர் செல்வம் பார்கில் இருந்து ஈரோடு பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

குப்புராஜ் அருகில் இரண்டு வாலிபர்கள் இருந்தனர். பஸ் ஈரோடு பஸ் நிலையம் அருகே வந்த போது அந்த இரண்டு வாலிபர்கள் குப்புராஜ் பையில் இருந்த பணத்தை திருடி கொண்டு ஓட முயன்றனர்.

குப்புராஜ் கூச்சல் போட்டதால் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி தெருவை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன்(வயது23), காளியம்மா கோவில் தெருவை சேர்ந்த பசுபதி(23) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், பசுபதி இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News