ஈரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி
ஈரோடு:
மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையை சேர்ந்தவர் உதயகுமார் (வயது37) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் முள்ளாம்பரப்பு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத வகையில் உதயகுமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த உதயகுமார் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.