செய்திகள்
தீக்குளித்த வாலிபர் தர்மலிங்கம்

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ஈரோடு வாலிபர் உயிரிழப்பு

Published On 2018-04-12 04:49 GMT   |   Update On 2018-04-12 04:49 GMT
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது25). இன்னும் திருமணம் ஆகவில்லை. பொம்மை வியாபாரம் செய்து வந்தார். அம்மா -அப்பா கிடையாது பாட்டி ஆதரவில் வசித்து வருகிறார்.

இவர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண் எண்ணை கேனுடன் வெளியே வந்தார். தனது வீட்டு சுவற்றில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது”

- பா.தர்மலிங்கம்.

இவ்வாறு அந்த சுவற்றில் மஞ்சள் கலர் சாக்பீசால் எழுதி வைத்திருந்தார்.

வாலிபர் தர்மலிங்கத்தின் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ள காட்சி.

பிறகு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பற்றி எரிந்த தீயால் அவர் அலறினார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் ஓடிவந்தனர். மேலும் அக்கம்பக்கம் உள்ளவர்களும் ஓடிவந்தனர். தர்மலிங்கம் உடலில் எரிந்த தீயை அணைத்து உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #CauveryIssue
Tags:    

Similar News