செய்திகள்

காவிரி விவகாரம்: தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தம்

Published On 2018-04-11 08:26 IST   |   Update On 2018-04-11 13:33:00 IST
தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. #CauveryIssues
சத்தியமங்கலம்:

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த 3ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 5ந்தேதி முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் கடந்த 8ந்தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்தினார்கள்.  தொடர்ந்து தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.  நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் சாலை மறியல், கண்டன போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனை சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.  அவை பாதுகாப்பினை கருதி புளிஞ்சூர் சோதனை சாவடி வழியாக போலீசாரால் திருப்பி அனுப்பப்படுகின்றன.

இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் வரும் கர்நாடக மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பெங்களூரு, மைசூரு கொள்ளேகால் ஆகிய ஊர்களில் இருந்து தினமும் ஆசனூர், சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு தினமும் பஸ்கள் வந்து செல்லும். இன்று காலை முதல் கர்நாடக மாநில அரசு பஸ்கள் வரவில்லை. இந்த பஸ்கள் கர்நாடக எல்லையான புளிஞ்சூர் வரை வந்து பயணிகளை இறக்கி விட்டு திரும்பி சென்று விடுகிறது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்திலிருந்து செல்லும் பஸ்களும் எல்லை பகுதியான புளிஞ்சூர் வரை சென்று திரும்புகிறது.#tamilnews

Similar News