கேளம்பாக்கம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தற்கொலை
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 35). இவரது மனைவி விஜயா (27).
இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அதே பகுதியில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தனர். அவர்களுக்கு உதவியாக சசிக்குமாரின் அண்ணன் மெய்ப்பொருள் கடையை கவனித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் கிராமம் ஆகும்.
குழந்தை இல்லாததால் சசிக்குமாரும், விஜயாவும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த இருவரும் ஓட்டலுக்கு வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மெய்ப்பொருள் வீட்டுக்கு வந்து பார்த்த போது சசிக்குமாரும், விஜயாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவர்களது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews