செய்திகள்

பெண்ணின் படத்தை ஆபாசமாக வெளியிடுவோம் என கூறி மிரட்டல்- 3 பேர் கைது

Published On 2018-03-23 04:44 GMT   |   Update On 2018-03-23 04:44 GMT
ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக இணையதளத்தில் வெளியிடுவோம் என கூறி பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் சாந்தி (வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்துவந்தார். இந்த அழகு நிலையத்திற்கு சென்னை கோடம்பாக்கம், அஜித் நகரை சேர்ந்த பைனான்சியர் ஜெகன்(28) என்பவர் அடிக்கடி வந்துசென்றார்.

அப்போது வாடிக்கையாளர் என்ற முறையில் ஜெகனுக்கும், சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி ஜெகன், சாந்தியை பலவிதங்களில் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி தனது ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையென்றால் ரூ.3 லட்சம் தரவேண்டும் என்று கூறி மிரட்டிவந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாந்தி வீட்டிற்கு நண்பர்களுடன் வந்த ஜெகன், மீண்டும் சாந்தியை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். பின்னர் சாந்தி அணிந்து இருந்த செயின், கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு பணம் கொடுக்கவில்லை என்றால் படங்களை இணையதளத்தில் ஆபாசமாக வெளியிடுவேன் என கூறி மிரட்டிவிட்டு ஜெகன் தனது நண்பர்களுடன் சென்றுவிட்டார்.

இதனால் செய்வதறியாது திகைத்த சாந்தி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் குன்றத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சாந்தியை வைத்தே ஜெகனை பிடிக்க முடிவு செய்தனர். சாந்தியை செல்போனில் ஜெகனிடம் பணம் கொடுப்பதாகவும், குன்றத்தூரில் வந்து வாங்கிக்கொள்ளும்படியும் பேசவைத்தனர்.

அதனை உண்மை என்று நம்பிய ஜெகன் நேற்று தனது நண்பர்கள் ஆலந்தூரை சேர்ந்த தேவ்சரண்(28), கிருஷ்ணன்(20) ஆகியோரை துணைக்கு அழைத்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு தனது சொகுசு காரில் வந்தார். வீட்டின் அருகே நின்றிருந்த சாந்தியிடம் பணத்தை வாங்க முற்பட்டபோது மாறுவேடத்தில் மறைந்திருந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் ஜெகன் உள்ளிட்ட கும்பலை கைது செய்தனர்.

போலீசார் அவர்கள் அனைவரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். சாந்தியின் மீது உள்ள மோகத்தில் அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் ஜெகன் தெரிவித்தார். 3 பேர் மீதும் பெண் வன்கொடுமை, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News