குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
தாம்பரம்:
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு மற்றும் 35-வது வார்டு பகுதிகளில் அண்ணாநகர், என்.எஸ்.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
அங்குள்ள வீடுகளுக்கு பைப் மூலம் வாரத்துக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் டேங்கர் லாரிகள் மூலம் குறைந்த அளவு தண்ணீர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் குமரங்குன்றம் பகுதியில் பல்லாவரம்-அஸ்தினாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிட்லபாக்கம் போலீசார் விரைந்து வந்துமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.