செய்திகள்

அசைவ உணவு தராததால் ஓட்டல் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு

Published On 2018-03-22 07:56 GMT   |   Update On 2018-03-22 07:56 GMT
கேளம்பாக்கத் அருகே உள்ள தனியார் ஓட்டலில் அசைவ உணவு தராத ஊழியர்கள் மீது வாடிக்கையாளர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர்:

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாதவன் (65).

இவர் நேற்று இரவு கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கினார்.

இரவு 10.30 மணிக்கு தனது அறைக்கு சாப்பாடு அனுப்பும்படி கூறி இருந்தார். அதன்படி ஓட்டல் ஊழியர்கள், சைவ உணவுகளை மாதவனின் அறைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் தனக்கு அசைவ உணவு வேண்டும் என்று மாதவன் கூறினார். ஓட்டல் சமையலறை மூடப்பட்டு விட்டதால் அசைவ உணவு இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாதவன் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

இதையடுத்து அவரை ஓட்டல் மேலாளர் சங்கரலிங்கத்திடம் அழைத்து சென்றனர். அவரிடமும் மாதவன் தகராறில் ஈடுபட்டார். தான் ஓட்டல் அறையை காலி செய்வதாக மாதவன் கூறினார். அப்போது கை கலப்பு ஏற்பட்டது.

திடீரென்று ஆவேசம் அடைந்த மாதவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஓட்டல் ஊழியர்களை நோக்கி சுட்டார். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் துப்பாக்கி குண்டுகள் படவில்லை.

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து ஓட்டல் மேலாளர் சங்கரலிங்கம் கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று மாதவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News