செய்திகள்

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி

Published On 2018-02-19 16:16 IST   |   Update On 2018-02-19 16:16:00 IST
ஈரோட்டில் முட்டைகோஸ் விலை குறைந்ததால் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் உள்ளதால் குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ருட் உள்பட காய்கறிகளை பயிரிடுகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களான எரஹனள்ளி, திகினாரை, ஜீரஹள்ளி, கல்மண்டிபுரம், அருள்வாடி, கெட்டவாடி, தமிழ்புரம், நெய்தாளபுரம், தலமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீலகிரி, சேன்டேஸ், கணேஸ் போன்ற பல்வேறு ரக முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகமாகி உள்ளது. தற்போது முட்டைகோஸ் விவசாயிடமிருந்து கிலோ ரூ.1 முதல் ரு.2 க்கு வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தாளவாடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

முட்டைகோஸ் 3 மாத கால பயிராகும். ஒரு ஏக்கருக்கு 25000 முதல் 30000 நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. உழவுக்கூலி, நடவுப்பணி, களையெடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.45000 செலவாகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.7 முதல் 12 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.

தற்போது வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.1 முதல் ரு.2 வரை தான் வாங்கி செல்கின்றனர். இதனால் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் செலவினத்தொகை கூட ஈட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக பயிரிடப்படும் பயிருக்கு தேவையான விதை மற்றும் உரம் வாங்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒருசில விவசாயிகள் அறுவடை செய்யும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளதால் முட்டைகோஸ் பயிரில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

முட்டைகோஸ் பயிரில் நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுப்பு செய்து அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.# tamilnews

Similar News