செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை- கணவர் மீது போலீசார் வழக்கு

Published On 2018-02-16 21:55 IST   |   Update On 2018-02-16 21:55:00 IST
நாகை அருகே வரதட்சணை கொடுமையால் 2 கைக் குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமருகல்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஆற்றங்கரை தெருவில் வசிப்பவர் ராஜசேகரன் (வயது 28). மினி லாரி ஓட்டி வருகிறார். இவரது சொந்த ஊர் காரைக்கால் மாவட்டம் காசாகுடி வடபாதி ஆகும். இவரது மனைவி ஆனந்தி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராஜஸ்ரீ (2), ஆசாத் (6 மாதம்) என்ற குழந்தைகள் உள்ளனர்.

ராஜசேகர் அடிக்கடி குடித்து விட்டு மனைவியை வரதட்சணை வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரது அக்கா ராதிகா என்பவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஆனந்தியின் உறவினர்கள் காரைக்காலில் வசித்து வந்த இருவரையும் கட்டுமாவடிக்கு அழைத்து வந்து தங்க வைத்தனர். அங்கு வாடகை வீட்டில் இருவரும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வாரம் ஒருமுறை காரைக்காலில் இருந்து கட்டுமாவடிக்கு வரும் ராஜசேகர் வழக்கம் போல் குடித்து விட்டு வந்து வரதட்சணை வாங்கி வர சொல்லி தகராறு செய்வாராம். நேற்று வீட்டுக்கு வந்த அவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஆனந்தி நள்ளிரவில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆனந்தி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. தனி விசாரணை நடத்தி வருகிறார்.

வரதட்சணை கொடுமையால் 2 கைக் குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews 

Similar News