செய்திகள்

மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: தாசில்தார் எச்சரிக்கை

Published On 2018-01-29 11:40 GMT   |   Update On 2018-01-29 11:40 GMT
மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று ஆனைமலை தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனைமலை:

மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகளில் உற்பத்தியாகி அம்பராம் பாளையம் அருகில் ஆழியாற்றில் சங்கமமாகும் ஆறு பாலாறு ஆகும். பாலாற்றுப் படுகையில் அதிகளவு ஆற்றுமணல் உள்ளது. நீர் வளம் காக்க ஆற்று மணலை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் பாலாற்றில் மணல்கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத்தடுக்க வருவாய்த்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறையினர் மட்டுமின்றி கண்காணிப்பு குழுவினரும் இரவு பகலாக ரோந்து சென்று பாலாற்றின் மணல் படுகையை பாதுகாக்கும் பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை 3 மணியளவில் கண்காணிப்புக் குழுவைச்சேர்ந்த மதியழகன், வீரமுத்து ஆகியோர் பாலாற்றில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலாற்றின் கரையிலுள்ள கருப்பராயர் கோவில் அருகில் ஆற்றின் மையப்பகுதியில் வெளிச்சம் தெரிவதைப்பார்த்தனர். கண்காணிப்புக் குழுவினர் அருகில் சென்று பார்த்த போது சரக்கு ஆட்டோவில் மணல் அள்ளுவது தெரிய வந்தது.

ஆட்கள் வருவதைப் பார்த்த மணல் திருடும் கும்பல் ஆற்றின் கரையிலுள்ள புதரில் ஓடிமறைந்து கொண்டது. சம்பவம் குறித்து கண்காணிப்புக் குழுவினர் தாசில்தார் செல்வபாண்டிக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் கிராம நிர்வாகஅலுவலர் செந்தில்குமார் மற்றும் உதவியாளர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பாலாற்றில் மணல் அள்ளிய சரக்கு ஆட்டோமற்றும் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொள்ளாச்சி தாசில்தார் செல்வபாண்டியிடம் ஒப்படைத்தனர்.

வருவாய்த்துறையினர் தொடர் விசாரணையில் பாலாற்றில் மணல் திருடிய சரக்கு ஆட்டோ அர்த்தநாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்மகன் உதயகுமார் (26) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இது குறித்து தாசில்தார் செல்வபாண்டி கூறும் போது, பாலாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவைச் சேர்ந்த மதியழகன், வீரமுத்து ஆகியோரைவருவாய்த்துறை சார்பில் பாராட்டிசான்றிதழ் வழங்கப்படும். இது வரை உதயகுமார் 3 முறை மணல் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவருக்கு கடுமையான எச்சரிக்கையுடன், 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார்.

Tags:    

Similar News