செய்திகள்

தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகைப் பறிப்பு

Published On 2018-01-29 11:22 GMT   |   Update On 2018-01-29 11:22 GMT
தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகைப் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பூபாலராய புரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வெற்றிக்கனி (வயது48). இவர் இன்று காலை பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் வெற்றிக்கனி அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்து செல்ல முயன்றனர்.

அப்போது வெற்றிக்கனி கூச்சலிட்டு நகையை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதில் பாதி கொள்ளையர்கள் கையிலும், மீதி வெற்றிக்கனி கையிலும் இருந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் 3½ பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்த ராஜேஸ்வரி (40) என்பவரிடம் பைக்கில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து வடபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி வி.வி.டி. சிக்னலை கடந்து செல்வோர் போலீசாரின் தீவிர பரிசோதனைக்கு பின்னரே செல்கின்றனர். இப்படி இருந்தும் இன்று காலை நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மாவட்ட போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்று சம்பவம் நிகழாத வண்ணம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News