செய்திகள்

போடியில் மீண்டும் சிறுத்தை புலி அட்டகாசம்

Published On 2018-01-29 10:19 GMT   |   Update On 2018-01-29 10:19 GMT
போடியில் மீண்டும் சிறுத்தை புலி புகுந்ததாக ஏற்பட்ட தகவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

போடி:

போடி அருகில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த 5 ஆடுகளை அடித்து கொன்றது.

இது அப்பகுதி மக்களை பெரிதும் பீதி அடைய வைத்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து சோதனை நடத்தியதில் ஊருக்குள் புகுந்தது சிறுத்தைதான் என உறுதி செய்தனர்.

நேற்று இரவு மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து மீண்டும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் அறிந்தவுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் முடங்கினர். வனத்துறையினரும் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதியில் அதிக சத்தம் கொண்ட பட்டாசு வெடிக்கப்பட்டது. மேலும் தீப்பந்தங்கள் கொண்டு இரவு முழுவதும் சிறுத்தையின் கால் தடம் தெரிந்த பகுதியில் சென்று சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் சிறுத்தை பிடிபடவில்லை. இருந்த போதும் இரவு முழுவதும் வனத்துறையினர் ஆயுதங்கள் கொண்டு சிறுத்தையை பிடிக்கும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு சிறுத்தை பீதி நிலவி வருவதால் பொதுமக்கள் தனியாக வீட்டிற்குள் இருக்கவும் இரவு நேரங்களில் வெளியே வரவும் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர். #tamilnews

Tags:    

Similar News