காரைக்குடி அருகே லாரி மீது மொபட் மோதல்: கணவன்- மனைவி பலி
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சிந்தாமணி (35). இவர்களது பூர்வீக வீடு, காரைக்குடி ரஸ்தா அருகே உள்ள சங்காராபுரத்தில் உள்ளது. நேற்று கணவன்- மனைவி இருவரும் அங்கு சென்றுவிட்டு, மொபட்டில் நாச்சியாபுரம் புறப்பட்டனர்.
ரஸ்தா- மானகரி சாலையில் வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த விறகு பாரம் ஏற்றிய லாரியை ஆறுமுகம் சரியாக கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த மொபட் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த சிந்தாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆறுமுகம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவயல் அருகே உள்ள வேதியங்குடியை சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை கைது செய்தனர். #tamilnews