செய்திகள்

ஜோசியம் பார்ப்பதாக பெண்மீது மயக்கபொடி தூவி நகை-பணம் கொள்ளை

Published On 2017-12-28 10:11 GMT   |   Update On 2017-12-28 10:11 GMT
ஜோசியம் பார்ப்பது போல் வந்த வாலிபர் பெண் மீது மயக்கபொடி தூவி நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:

திருநின்றவூரை அடுத்த நத்தம்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கல்பனா. சம்பவத்தன்று வீட்டில் கல்பனா மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஜோசியம் பார்ப்பதாக அங்கு வந்தார். அவர் கல்பனாவிடம் பேச்சு கொடுத்து குடிக்க தண்ணீர் கேட்டார்.

இதையடுத்து கல்பனா வீட்டுக்குள் சென்றார். பின்னால் சென்ற மர்மநபர் திடீரென கல்பனா மீது மயக்க பொடியை தூவினார். பின்னர் அவரை வசியம் செய்து வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடுக்கும்படி கேட்டார்.

சுயநினைவை இழந்த கல்பனா வீட்டில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் பக்கத்துவீட்டில் இருந்து ரூ.1000 கடன் வாங்கி மர்மநபரிடம் கொடுத்தார். உடனே அவன் நகை, பணத்துடன் தப்பி சென்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த கல்பனாவுக்கு நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிந்தது.

ஜோசியம் பார்ப்பது போல் வந்த வாலிபர் பெண் ஒருவருடன் அப்பகுதியில் சுற்றியதை சிலர் பார்த்துள்ளனர். அவனை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News