செய்திகள்

பெருந்துறை அருகே தனியார் பஸ் - வேன் மோதல்: பனியன் தொழிலாளி பலி

Published On 2017-12-20 17:19 IST   |   Update On 2017-12-20 17:19:00 IST
பெருந்துறை அருகே தனியார் பஸ் - வேன் திடீரென்று மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை:

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் இருந்து திங்களூருக்கு பனியன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். இதேபோல் நம்பியூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

திங்களூர் நல்லாம்பட்டி ரோடு அம்மன்கோவில் அருகே இன்று காலை 8 மணியளவில் இரு வாகனங்களும் எதிர் எதிரே வந்தபோது சைடில் எதிர் பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.

பஸ்சின் முன்பகுதி வேனின் பின்புறத்தில் மோதியது. இதனால் வேனில் வந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர்.

இந்த விபத்தில் வேனின் பின்புறத்தில் அமர்ந்துவந்த வெள்ளாங்கோவில் மணியன் தோட்டத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி அருண்குமார் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

மேலும் இந்த விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News