சென்னிமலை லேத் பட்டறையில் திருட்டு: வாலிபர் கைது
சென்னிமலை:
சென்னிமலை காமராஜ் நகரில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருபவர் சந்திரன் (வயது 39). இவரது கடைக்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் ஜன்னல் கதவுகள் புதிதாக செய்ய வேண்டும் என விசாரித்து விட்டு சென்றார்.
இந்த நிலையில் சந்திரன் உணவு இடைவேளைக்கு சென்றார். அப்போது சாத்தியிருந்த கடையின் ஷட்டரை நீக்கும் சத்தம் கேட்டது. எனவே சந்திரன் அங்கு வந்து பார்த்தார்.
அப்போது உள்ளே இருந்த பொருட்களை ஒருவர் திருடிக்கொண்டு இருந்தார். சந்திரனும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்த அந்த நபரை பிடித்தனர். அப்போது அவர் ஏற்கனவே அந்த கடைக்கு வந்து ஜன்னல், கதவுகள் பற்றி கேட்ட வாலிபர் என்பது தெரிய வந்தது.
எனவே அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சந்தோஷ் என்பதும், சேலம் மேச்சேரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த ஆயுத பூஜை தினத்தன்று இதே கடையில் வெல்டிங் மிசின், கட்டிங் மிசின், சானை பிடிக்கும் மிசின் ஆகியவற்றை சந்தோஷ் திருடி சென்றுள்ளார். தற்போது மீண்டும் இதே கடைக்கு திருட வந்து மாட்டிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இவரும் இவரது கூட்டாளியுமான ஆட்டோ குமாரும் மதிய நேரத்தில் எந்த கடை உணவு இடை வேளைக்கு பூட்டாமல் சாத்தப்படுகிறதோ அந்த கடையை பார்த்து கைவரிசை காட்டி வந்துள்ளனர்.
அதே பகுதியில் திருட்டு நடந்த 10-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் வந்து புகார் கூறியபோது தான் இவர்களது இந்த கைவரிசை தெரியவந்தது. பிடிபட்ட சந்தோஷ் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு இந்த திருட்டு தொழிலில் இறங்கியுள்ளார்.
இவரது கூட்டாளியான ஆட்டோ குமார் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுக் கடை பகுதியில் அவர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ஆட்டோ குமாரை கைது செய்தனர்.