செய்திகள்

பெருங்குடியில் டாக்டர் வீட்டில் வைர நகைகள் கொள்ளை

Published On 2017-12-12 09:34 GMT   |   Update On 2017-12-12 09:34 GMT
பெருங்குடியில் டாக்டர் வீட்டில் வைர நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர்:

பெருங்குடி சி.பி.ஐ. காலனியில் வசித்து வருபவர் தவபழனி. இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரதா.

நேற்று காலை தவபழனி மருத்துவமனைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சாரதா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றார்.

இரவு சாரதா மட்டும் திரும்பி வந்தார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. மிளகாய் பொடியும் தூவப்பட்டு கிடந்தது.

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ. 8 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகைகளை அள்ளி சென்றிருப்பது தெரிந்தது.

மேலும் போலீசில் சிக்காமல் இருக்க சினிமா பாணியில் மிளகாய் பொடியும் தூவி சென்றுள்ளனர். இது குறித்து துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News