செய்திகள்

ஈரோடு நட்டாற்று ஈஸ்வரன் கோவிலில் சர்வதேச கோர்ட் நீதிபதி சாமி தரிசனம்

Published On 2017-11-29 17:35 IST   |   Update On 2017-11-30 09:11:00 IST
சர்வதேச கோர்ட் நீதிபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட டல்வீர் பண்டாரி இன்று ஈரோடு நட்டாற்று ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஈரோடு:

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச கோர்ட்டு செயல்படுகிறது. 15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த கோர்ட்டில் கடைசி ஒரு இடத்துக்கு தற்போது அங்கு நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரி(70), இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட்(62) ஆகியோர் மோதினர்.

இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு சுற்று தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. இடையில், இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட் போட்டியில் இருந்து விலகி கொண்டார். இதையடுத்து, காலியாக இருந்த நீதிபதி பதவியில் டல்வீர் பண்டாரி கடந்த நவம்பர் 21-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள நட்டாற்று ஈஸ்வரன் என்ற சிவன் கோவிலின் மகிமையப் பற்றி அறியவந்த சர்வதேச கோர்ட் நீதிபதி டல்வீர் பண்டாரி இந்த கோயிலில் தரிசனம் செய்ய விரும்பினார்.

இதையடுத்து, இன்று நட்டாற்று ஈஸ்வரன் கோவிலுக்கு வந்த அவருக்கு அம்மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட நீதிபதி மற்றும் கோவில் நிர்வாகிகள் அறங்காவலர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் இருந்த  டல்வீர் பண்டாரி அங்கிருந்து காரில் கோயமுத்தூர் புறப்பட்டு சென்றார்.

Similar News