செய்திகள்

97 பயனாளிகளுக்கு ரூ.48 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

Published On 2017-11-12 19:29 IST   |   Update On 2017-11-12 19:29:00 IST
கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் 97 பயனாளிகளுக்கு ரூ.48 1/2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம்  நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமை தாங்கினார். அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனராஜன் வரவேற்று பேசினார். முகாமில், 9 நபர்களுக்கு நத்தம் வீட்டுமனை பட்டாக்களும், வேளாண்மைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் உள்பட மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 45 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாத்துக்கொள்ள டெங்கு கொசு ஒழிப்பு பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது வீடுகள், சுற்றுப்புறங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள், குடிநீர் தொட்டிகள் போன்றவற்றில் தூய்மையை பராமரிக்க வேண்டும்.

கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சியில் தனிநபர் இல்ல கழிப்பறை குறைவாக உள்ளதால், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் இப்பகுதியில் கூடுதலாக தனிநபர் இல்ல கழிப்பறைகளை கட்டி, அரசு மானிய நிதியுதவியினை பெற்று தனிநபர் இல்ல கழிப்பறை பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News