செய்திகள்

ஏரிகள் உடையும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் உதயகுமார்

Published On 2017-11-02 12:37 IST   |   Update On 2017-11-02 12:38:00 IST
ஏரிகள் உடையும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்தி பரப்புபவர்கள் மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை:

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழிலகத்தில் மழை நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மற்றும் புறநகரில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு இப்போதுதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 679 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது (கொள்ளளவு 3645) அதாவது மொத்த கொள்ளளவில் 15 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

இதேபோல் அனைத்து ஏரிகளிலும் தண்ணீரை பாதுகாப்பாக வைத்துள்ளோம்.

ஆனால் சிலர் ஏரி நிரம்பி விட்டது. உடைப்பு ஏற்படுகிறது என்று வதந்தி பரப்புகிறார்கள். அதில் உண்மையல்ல. எனவே எந்தவித வதந்தியையும் நம்ப வேண்டாம்.


இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அரசை பழி போட இது நேரமில்லை. வதந்தி பரப்புபவர்கள் மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம்.

பருவ மழையை எதிர் கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெருமழையின் போது ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு, பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன் கூட்டியே சென்று முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் மழை நேரங்களில் 4399 பகுதிகள் பாதிக்கப்பட கூடிய இடங்கள் என்று கண்டறிந்துள்ளோம்.

நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்பு குழுவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாராக இருக்கிறது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கும் போது மக்களை விரைவாக வெளியேற்ற முடிகிறது. அதன்படி காஞ்சீபுரத்தில் 250 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News