டெங்கு கொசு: டாஸ்மாக் குடோன்-போக்குவரத்து பணிமனைக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம்- கலெக்டர்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முழுமுச்சுடன் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
ஓரிக்கை பகுதியில் உள்ள டாஸ்மாக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையிலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையிலும் குப்பைகள் குவிந்து இருந்தது. இதனை கண்ட கலெக்டர் பொன்னையா உடனடியாக அந்த இடத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் டாஸ்மாக் குடோனுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமாக விதித்தார்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று கலெக்டர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிமனை சுகாதாரமற்ற நிலையில காணப்பட்டது. இதையடுத்து அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமாக விதித்தார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் சர்தார், நகர்நல அலுவலர் முத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.