செந்துறை அருகே சுகாதார உறுதிமொழி ஏற்பு முகாம்: டெங்குவை தடுக்க நடவடிக்கை
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ‘டெங்கு’ குறித்த சுகாதார உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றனர். ‘டெங்கு’ பரவுவதை தடுக்க, அரசு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இடையக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் ராவணன் உறுதிமொழியை வாசிக்க, பொதுமக்கள் தொடர்ந்து வாசித்தனர்.
என் வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ, டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப் போன்றவற்றை போட மாட்டேன்.வீணான பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே அகற்றி விடுவேன். அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.இவ்வாறு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இடையக்குறிச்சி கிராமத்தில் மருத்துவ அலுவலர் ராவணன் தலைமையிலான குழு வீடு வீடாக சென்று கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.