செய்திகள்

பெருந்துறை அருகே மர்ம காய்ச்சலுக்கு வட மாநில வாலிபர் பலி

Published On 2017-10-07 10:41 GMT   |   Update On 2017-10-07 10:41 GMT
பெருந்துறை அருகே மர்ம காய்ச்சலுக்கு வட மாநில வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. காய்ச்சல் பாதித்து மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 27 பேர் இறந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பெண் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். ஈரோடு முத்தம்பாளையம் அவுசிங் யூனிட் அடுத்த ரெயில் நகரை சேர்ந்தவர் ஷேக் ரிஸ்வான் (வயது 39). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.

இவரது மனைவி சையது நிஷா (34). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து அவரை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. எனவே அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சையது நிஷா பரிதாபமாக இறந்தார்.

பலியான சையது நிஷாவுக்கு நலித் அகமது (10) என்ற மகன் உள்ளார். நலித் அகமது அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறார்.

சையது நிஷா பலியானதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச் சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு பெண் இறந்திருப்பது ஈரோடு மாநகர பகுதி மக்களை அச்சப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பெருந்துறை அருகே வட மாநில வாலிபர் ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெல்வாசிங் (வயது21). இவர் பெருந்துறை அடுத்த ஈங்கூர், கவுண்டனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ஜெல்வா சிங் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜெல்வாசிங் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News