செய்திகள்

தினகரன் தனிக்கட்சி தொடங்க திட்டம்: குன்னம் எம்.எல்.ஏ. கணிப்பு

Published On 2017-10-03 16:35 IST   |   Update On 2017-10-03 16:36:00 IST
டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் ஆரம்பித்து விட்டதாக குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர்கள் கூறுகின்ற அரசாங்க கருத்துக்கள், அரசோட கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். அமைச்சரோ, என்னை போன்ற மாவட்ட செயலாளர்களோ சொல்லும் கருத்துக்கள் அவர்களது உள்மனதில் உள்ள சொந்தக்கருத்து. கட்சி கருத்தாக கருதக்கூடாது.

தினகரனையும், சசிகலாவையும் ஏற்று கொண்டால் ஆட்சியாளர்கள் நல்லவர்கள், ஆட்சி தொடர வேண்டும். ஏற்று கொள்ளவில்லை எனில் இது கெட்ட ஆட்சி. தினகரனையும், சசிகலாவையும் எதிர்த்தால் ஆட்சி கலைய வேண்டுமா? என தினகரனிடம் நானே கேட்கிறேன். தினகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த அ.தி.மு.க.,விலிருந்து விலகி வெகுநாட்கள் ஆகிவிட்டது.

ஜெயலலிதா தலைமையில் கட்சியை நடத்திய பொறுப்பாளர்கள் எல்லாம் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது, தினகரன் ஜெயலலிதா அறிவித்த பொறுப்பாளர்களை நீக்கியதிலிருந்து தெரியவருகிறது.

எனவே தினகரன் தனிக்கட்சி தொடங்க ஆயத்த பணியை ஆரம்பித்து விட்டார். சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் யார் செயல்பட்டாலும் காவல் துறையும், அரசும் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யும்.

விருத்தாச்சலம் மற்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ.,க்கள் தினகரன் அணியில் இருக்கிறார்களே தவிர, ஆளுநரை பார்த்து முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. ஏன் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News