செய்திகள்

தாளவாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு தனியார் நிறுவன மேலாளர் பலி

Published On 2017-09-30 16:57 IST   |   Update On 2017-09-30 16:57:00 IST
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இது வரை 27 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் மாதேஷ் (வயது 35). இவர் கோவையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான ராமாபுரத்திற்கு வந்து விட்டு கோவை சென்றார். அப்போது அவர் திடீரென காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாக வில்லை. பின்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஜோசப் மாதேஷ் வைரஸ் காய்ச்சலால் இறந்தார் என கூறப்படுகிறது. இறந்தவருக்கு தீபா என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும் 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த சம்பவத்தால் தாளவாடி பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பீதியில் உள்ளனர்.

Similar News