வானகரத்தில் கொலையுண்டவர் அடையாளம் தெரிந்தது
போரூர்:
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நேற்று சாலையோரம் துணி மூட்டையில் வாலிபர் ஒருவர் கை, கால் கட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது உடலில் வெட்டு காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை சாலையில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. அவரது உடலை மதுரவாயல் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் கொலையுண்டது மதுரவாயல் நார்த்தமாதா 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த குணசீலன் (27) என்பதும் தெரியவந்தது. ரவுடியான இவர் 2016-ம் ஆண்டு அமைந்தகரையில் தீபக் ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஆவார்.
அவரது கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்டு பழிக்கு பழியாக தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குணசீலன் மீது எத்தகைய வழக்குகள் உள்ளன. யார்-யாருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.