கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
கூடுவாஞ்சேரி:
வண்டலூரை சேர்ந்தவர் காளிகேஸ்வரன் (வயது 28). மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த அழகர் கருப்புசாமியுடன் (32) மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார்.
கூடுவாஞ்சேரி அருகே வந்த போது சரக்கு ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய 2 பேரும் தவறி கீழே விழுந்தனர்.
அந்த நேரத்தில் பின்னால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே காளிகேஸ்வரனும், அழகர் கருப்பு சாமியும் பரிதாபமாக இறந்தனர்.
கூடுவாஞ்சேரி போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.