செய்திகள்

சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் சிக்கியது

Published On 2017-09-15 10:15 GMT   |   Update On 2017-09-15 10:15 GMT
சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் சிக்கியது, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனை முடிந்த பிறகு விமான நிலைய ஒப்பந்த தற்காலிக ஊழியர் கரிகாலன் ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றார்.

அதை பார்த்து சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், அவரிடம் விசாரித்தார். அப்போது கரிகாலன், விமானத்தில் வந்த தன் உறவினர் வயதானவர் என்பதால் அவரது பையை காரில் வைக்க எடுத்து செல்வதாக கூறினார்.

ஆனால் உறவினர் பெயர், எந்த விமானத்தில் வந்தார் என்பது குறித்து கேட்டதற்கு முன்பின் பதிலளித்தார்.

இதையடுத்து அந்த பையை சோதனை செய்த போது அதில் தலா 1 கிலோ எடையுள்ள 3 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இதையடுத்து கரிகாலனை சுங்க துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர் விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை வெளியே எடுத்து செல்வதற்கு உடந்தையாக இருந்துள்ளார். அவர் யாரிடம் தங்க கட்டிகளை வாங்கினார் என்பது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று காலை கொழும்பு செல்ல இருந்த விமானத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகமதுயூனிஸ், சம்சுதீன் ஆகியோரின் உடமைகளை ஸ்கேன் செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.

உடமைகளை பிரித்து பார்த்தபோது ரூ.30 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, சிங்கப்பூர் டாலர் ஆகிய வெளிநாட்டு பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News