செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Published On 2017-08-23 20:46 IST   |   Update On 2017-08-23 20:46:00 IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியது.
கடலூர்:

அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்,

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கொண்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம், பேரணி போன்றவை நடத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 7–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிட அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 22–ந்தேதி (அதாவது நேற்று) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் இவர்களது போராட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டத்திலும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். இதனால் நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.

மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில், தற்போது கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வரும் மாணவர்கள் ஏற்கனவே அங்கு பயிற்சியில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு பயிற்சியில் உள்ள ஆசிரியர்களை கொண்டு நேற்று வகுப்புகள் நடத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதேபோன்று வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைத்துறை, வணிக வரித்துறை, புள்ளியியல் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை என்று பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடிய கிடந்தது. அரசு பணிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம் முழுவதும் தாலுகா அளவில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கடலூரில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ஜனார்த்தனன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஜக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எல்லப்பன், அரிகிருஷ்ணன், உத்தராமச்சந்திரன், சுந்தரராஜன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் அரசு பணியாளர்கள் சங்க மாநில துணைதலைவர் நல்லதம்பி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் இளங்கோவன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ஹென்றி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஜக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் கூறுகையில், கோரிக்கைளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரம் பேரில் சுமார் 15 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முழுவதுமாக பணிக்கு செல்லவில்லை. அதாவது 90 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை. இதன் மூலம் நேற்று மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பணிகள் முடங்கி போய்விட்டன.

தொடர்ந்து செப்டம்பர் மாதம் 7–ந்தேதி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு கடலூரில் வருகிற 26–ந்தேதி(சனிக்கிழமை) ஜக்டோ–ஜியோ சார்பில் நடைபெற இருக்கிறது என்று அவர் கூறினார்.

இதேபோன்று மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகாக்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News