செய்திகள்

விருத்தாசலம் அருகே கள்ளக்காதலை கண்டித்த பெண்ணை தீ வைத்து கொல்ல முயற்சி: தொழிலாளி கைது

Published On 2017-08-21 10:55 GMT   |   Update On 2017-08-21 10:55 GMT
விருத்தாசலம் அருகே கள்ளக்காதலை பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சசிகலா (வயது 28). இவர்களுக்கு கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரியுடன் (18) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகி வசித்து வருகின்றனர். தனது கணவர் மணிகண்டன் தன்னை விட்டு பிரிந்ததால் சசிகலா மனவேதனை அடைந்தார்.

அவர் ஜெகதீஸ்வரியின் தந்தை ஜெகதீசன் வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்த ஜெகதீசன், அவரது மனைவி சரோஜா ஆகியோரிடம், என் கணவர் மணிகண்டன் உங்கள் மகளுடன்தான் சென்றுள்ளார். அவரை நீங்கள் தான் கண்டுபிடித்துத்தர வேண்டும் என்று கூறினார். மேலும் ஜெகதீஸ்வரியின் கள்ளக்காதலை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன், தனது மனைவி சரோஜாவுடன் சேர்ந்து சசிகலா மீது திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் சசிகலா உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சசிகலாவை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சசிகலா விருத்தாசலம் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் ஜெகதீசன், மற்றும் சரோஜா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News