செய்திகள்

திட்டக்குடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: ரோட்டில் புளியமரம் வேரோடு சாய்ந்தது

Published On 2017-08-20 20:20 IST   |   Update On 2017-08-20 20:20:00 IST
திட்டக்குடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை செய்ததால் ரோட்டில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் அதை சுற்றிஉள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளிகாற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது. தொடர்ந்து சில மணி நேரம் கனமழை நீடித்தது.

இதனால் பெண்ணாடம் மற்றும் திட்டக்குடியில் உள்ள சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த சூறாவளிகாற்றுடன் மழை தொடர்ந்து பெய்ததால் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி- ராமநத்தம் சாலையோரம் நின்ற 60 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடிய வில்லை. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரமும் தடைபட்டது.

தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News