வேதாரண்யத்தில் வீடு புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (49) தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி வேதநாயகி (48). கடந்த 11ம் தேதி குடும்ப பிரச்சினையில் மருமகன் முரளி என்பவர் வேதநாயகியை வெட்டியதில் காயமடைந்து திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிவகுமார் அவருடனேயே மருத்துவமனையில் தங்கி விட்டார்.
சிவகுமார் மகன் மணிகண்டன் கல்லூரியில் சேருவதற்காக அவருடைய துணிகள், படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் வீட்டில் வைத்திருந்தாராம். மேலும் பீரோவில் 20 பவுன் நகைகளை வைத்து பூட்டி வைத்திருந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே இறங்கி பீரோவை உடைத்து 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து சிவகுமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.