சிறுபாக்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு
சிறுபாக்கம்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சிறுபாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.விவசாயி. இவரது மனைவி சாந்தி (வயது31). இவர் நேற்று மாலை அதே பகுதியில் இருக்கும் தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். மலையனூர் பாதையில் வந்த போது ஒரு மோட்டார் சைகிக்கிளில் 2 மர்ம வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாந்தியை வழிமறித்தனர். அவர்கள் சாந்தியை பார்த்து, கழுத்தில் கிடக்கும் நகையை கழற்றி கொடு என்று கேட்டனர். அதற்கு சாந்தி மறுத்தார். உடனே அவர்களில் ஒருவர் சாந்தியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். மற்றொருவர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தார். பின்னர் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சிறுபாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.