செய்திகள்

நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வலியுறுத்தி வருகிறோம்: செங்கோட்டையன்

Published On 2017-08-16 09:41 IST   |   Update On 2017-08-16 09:42:00 IST
‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க கோரி பிரதமரை 4 முறை சந்தித்து இருக்கிறோம். விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செங்கோட்டையன் கூறினார்.

கடலூர்:

கடலூரில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க கோரி பிரதமரை 4 முறை சந்தித்து இருக்கிறோம். விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம்.

மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஆணைக்கு இணங்க ஆய்வின் அடிப்படையில் 2 பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

புதிய பாடதிட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாட திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும். 7 ஆயிரத்து 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால் தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.


தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம். கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை. வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News