செய்திகள்

காரைக்குடி அருகே சொத்து தகராறில் பெண் வெட்டிக் கொலை

Published On 2017-08-08 18:20 GMT   |   Update On 2017-08-08 18:21 GMT
காரைக்குடி அருகே சொத்து தகராறில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேது(வயது 58). இவர் கொத்தனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி முத்துலட்சுமி, இவருக்கு 3 மகன், 1 மகள் உள்ளனர். 2–வது மனைவி முனியம்மாள், இவருக்கு குழந்தைகள் கிடையாது. முத்துலட்சுமியின் 3–வது மகன் லட்சுமணன்(25). இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதுவின் முதல் மனைவி முத்துலட்சுமி இறந்துபோனார். இதனையடுத்து ஊருக்கு வந்த லட்சுமணன், அதன்பின்னர் வெளியூருக்கு வேலைக்கு செல்லவில்லை. மேலும் சேதுவிடம், சொத்தை பிரித்து தருமாறு கூறி அடிக்கடி லட்சுமணன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றும் வழக்கம்போல் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், சேதுவையும், 2–வது மனைவி முனியம்மாளையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றுவிட்டார். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த கணவன்–மனைவி சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் இறந்துபோனார். சேதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லட்சுமணனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News