செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் 9 பேர் காயம்

Published On 2017-08-08 17:57 GMT   |   Update On 2017-08-08 17:57 GMT
கிருஷ்ணகிரி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் 9 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அவர்கள் அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (வயது 35) என்பவரின் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.

அதேபோல நேற்று அவர்கள் பள்ளிக்கு சென்றனர். மாலையில் பள்ளி முடிந்து அதே ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் வேட்டியம்பட்டி அருகே ஆட்டோ சென்ற போது நிலைதடுமாறி கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில், பழனி (வயது 7), இளவரசன் (6), அருணா (15), பூஜாஸ்ரீ (9), ஹன்சிகா (8), கனிமொழி (13), அபி (15), நந்தினி (13), சாருமதி (10) ஆகிய 9 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

ஆட்டோ டிரைவர் பெரியசாமியும் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News