செய்திகள்
வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்

கோபி அருகே ஆடிட்டர் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2017-07-25 11:59 GMT   |   Update On 2017-07-25 11:59 GMT
கோபி அருகே ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி அருகே உள்ள வடுகப்பாளையம்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 46). ஆடிட்டராக உள்ளார்.

நேற்று முன்தினம் ஆடி அமாவாசையையொட்டி ஆடிட்டர் பழனிச்சாமி தனது மனைவி கவுசல்யா, குழந்தைகளுடன் பெருந்துறையில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் மட்டும் திரும்பி வீட்டுக்கு வந்தார். மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றார்.

இந்த நிலையில் அவரது மனைவி கவுசல்யா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது.பொருட்கள், துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

பீரோவில் இருந்த 16½ பவுன் நகை மற்றும் பணத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இது குறித்து கோபி போலீசில் கவுசல்யா புகார் செய்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News