செய்திகள்

பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது

Published On 2017-07-19 14:14 IST   |   Update On 2017-07-19 14:14:00 IST
தாம்பரத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடியாக கைது செய்தனர்.
தாம்பரம்:

பரங்கிமலையைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது பெட்ரோல் பங்கின் ஒரு பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்கை மூடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தாம்பரம் ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) ரவிச்சந்திரன், ஆலந்தூர் தாசில்தார் தனசேகரன், வருவாய் ஆய்வாளர் முத்தழகன் ஆகியோர் பெட்ரோல் பங்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெட்ரோல் பங்கை தடையின்றி நடத்த வேண்டும் என்றால் 3 பேருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மோகன சுந்தரத்திடம் அவர்கள் கேட்டனர்.

இதன்படி நேற்று இரவு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 1 லட்சம் ரூபாயை வாங்கி கொள்வதாக 3 பேரும் தெரிவித்து இருந்தனர். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத மோகனசுந்தரம் இதுபற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் 3 பேரையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் மோகனசுந்தரம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து 3 பேரிடமும் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், தாசில்தார் தனசேகரன், ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், வருவாய் இன்ஸ்பெக்டர் முத்தழகன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பெட்ரோல் பங்கை தொடர்ந்து நடத்துவதற்காக இவர்கள் 3 பேரும் ரூ.10 லட்சம் வரையில் பேரம் பேசியதாகவும் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணத்தை வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஒரே நேரத்தில் 3 அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் சென்னையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி வேட்டை அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News